சென்னை: "தலைவா" பட விவகாரம் தொடர்பாக சென்னையில் நடிகர் விஜய் உள்பட படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் கடந்த 9ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே "தலைவா" வெளியாக இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட படக்குழுவினர் கோடநாடு சென்றதாகவும், அவர்கள் வழியிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே, "தலைவா" படம் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் வெளியாகாவிட்டால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன் என்றும், 'முதல்வர் அம்மா' மனமிறங்கி படம் வெளிவர நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், "தலைவா" படம் வெளியிட நடவடிக்கை எடுக்க கோரி படத்தின் இயக்குனர் விஜய், உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று மனு கொடுத்துள்ளார்.
இந்த உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய், நடிகை அமலாபால், சத்யராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment